பருவகாரு மகன்
நான் சாதியெல்லாம்
பாக்குறது இல்ல
என்ற ஒற்றைச் சொல்லில்
தளிர்விட்டுக் கொண்டிருக்கிறது
என் நண்பனுக்கும்
எனக்குமான சாதி...
அவன் எப்பொழுதுமே
அறிவில் என்னை
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்...
ஆனால்,என்று யோசிக்கையில்
சாதியை வெளிப்படுத்தியாகவேண்டிய
கட்டாயத்தை கட்டமைத்துவிட்டது
இந்த சமூகம்...
அவனுடன் வெளியே
சுற்றும்பொழுது
அவன் யார் என்ற
வினவலுக்கு
"அந்த பற தெருவச் சேந்த பையன்"
எனும்
நண்பனின் பதிலுக்கு
"ஓ அப்படியா...
பார்த்து அவனவிட
நல்ல படி"
என்ற வியாக்யானம் பகர்ந்து செல்லும்
என் நண்பனின் மூத்தாருரை...
பள்ளிக்கூடத்தில்
சாதியை சொல்லி
யாரையும் அசிங்கப்படுத்ததுதல் என்பது
என் காலத்தில் குறைந்திருந்தது...
ஆனாலும்,
நீங்களாம் நல்லாத்தானே
இருக்கீங்க
என்ற அறியாமை அவனில்
மேலோங்கும்...
எங்க காலம் தொட்டு
சேரிகதான்
பள்ளிக்கூடத்தில் மெஜாரிட்டி...
அதுமட்டும் இல்லாம
எங்க முன்னோடிகள்
பலர் படிப்பை மட்டுமே
ஆயுதமாக்கி வென்று காட்சிக்கும் வைத்திருந்ததுதான்...
ஒரு கவுண்டர் பையன் சொல்வான்
டேய் அந்த சாரு
உங்க அண்ணா தானே..!
ஒரு செட்டியார் பையன் சொல்வான்
டேய் அந்த மணியாரு
உங்க பெரியப்பா தானே..!
ஒரு முஸ்லீம் பையன் சொல்வான்
டேய் அந்த போலீசு
உங்க மாமா தானே..!
என்ற வியப்பை மட்டும்
நான் முதலாகக் கொடுத்துக்கொண்டே வருவதுதான்
இந்தக் கல்விக்கான பெருமை...
பருவம்பாத்து பொழச்ச
பறைய மகனுகலெல்லாம்
நல்லா படிச்சு
நல்ல நிலைமைக்குப் போயிட்டானுக
என்ற பேச்சுக்கும்
மற்ற சாதிக்காரரின்
எங்களுடனான சிநேகத்திற்கும்
கல்வி ஒன்றே
காரணமெனத் தெரிந்தும்கூட
தோள்மேல் கையைப் போட்டுவிட்டு
நாம் சமத்துவத்தை
எதிர்நோக்கினால்
"ம்ம்ம்...
நம்ம பருவகாரு மகன்தான்"
என தன் சாதியத்தை
பேச்சில் வைத்து
தோளைத் தட்டுகிறான்
பள்ளி நண்பன் இன்றும்கூட..!
- எஸ். உதய பாலா
கருத்துகள்
கருத்துரையிடுக